Thursday, September 3, 2009

புலியைப் பற்றி பேச பெருச்சாளிகளுக்கு தகுதியில்லை!!

பினாங்கு, கம்போங் புவா பாலா, வீடுகள் உடைப்பட்டப்போது இராமசாமி எங்கே போய்விட்டார் என்று நேற்று பத்திரிகைகளில் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். பினாங்கின் புலி என்று பேராசிரியர் கூறிக்கொள்கிறார் என்று அந்த நபர் கூறியுள்ளார். ஒரு திருத்தம், நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், பேராசிரியர் புலிதான்; அவர் பினாங்கில் மட்டும் புலியல்ல, மலேசியாவிற்கே புலிதான். அவர் காகித புலியல்ல; காரிய புலி!! இன்று புவா பாலா கிராம மக்களுக்கு, சுமார் 5 இலட்சம் வெள்ளி மதிப்புள்ளஇரட்டை மாடி வீடுகள் அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே இழப்பீடாக கிடைக்கின்றது என்றால் அதற்கு காரணம் பேராசிரியர் இராமசாமிதான். எத்தனையோ இந்தியர் பெரும்பான்மை கிராமங்கள் மேம்பாட்டுக்காக எடுத்தக்கொள்ளப்பட்ட பொழுது, வாக்குறுதிகளை தந்து ஏமாற்றியவர்கள் யாரென்று ஆதாரத்தோடு எங்களால் நிருபிக்க முடியும். அப்படி நாங்கள் நிருபிக்கையில் தெரியும், 30 வருடங்களாக யார் வெற்று வாக்குறுதிகளின் வேந்தனாக இருந்தது, காகித புலியாக பறந்தது என்று.

தானேத் தலைவன், தானைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த ஓரு
மனிதருக்கு அடுத்து, இப்பொழுது இந்தியர்களின் நம்பிக்கை நட்சித்தரமாக பேராசிரியர் உருவாகியுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல், புலம்புகிறார்கள் இந்த அடிவருடிகள்.

கம்போங் புவா பாலா பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது போல அறிக்கை விடுத்திருக்கும் மோகன், மலிவான விளம்பரம் தேடி அலைகின்றார் என்பது அவரின் அண்மைய
நடவடிக்கைகளுக்கும், அறிக்கைகளுமே புலப்படுத்துகின்றன. பினாங்கு மாநில அரசு தலையிட்டதால், கம்போங் புவா பாலா பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணும் நிலை ஏற்பட்டது; தலையும் தெரியாமல், வாலும் தெரியமால் கம்போங் புவா பாலா விவகாரத்தில் மூக்கை நுழைத்து, அனைவரையும் குழப்பி மலிவு விளம்பரம் தேடியது இந்த மோகனும், அவரின் நண்பர்களும்தான். மலேசியாவில் எங்காவது, நிலம் பறிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சுமார் 5 இலட்சம் மதிப்புள்ள இரட்டை மாடி வீடுகள் இழப்பீடாக தரப்பட்டுள்ளதா? தங்களது குடியிருப்பை மாற்றி செல்வதற்கு 8 ஆயிரம் ரிங்கிட் செலவுத்தொகை வழங்கப்பட்டுள்ளதா? இதற்கு முன்பு எத்தனையோ நில திட்டங்களுக்கு பல கிராமங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன, எத்தனையோ இந்திய குடும்பங்கள் இது போன்ற திட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; எப்பொழுதாவது மஇகாவோ அதன் தலைவரோ இதுப்போன்ற ஒரு இழப்பிட்டை பெற்றுத் தந்துள்ளனரா? கம்போங் புவா பாலா மக்களுக்கு, அவர்கள் வாழ்ந்த நிலத்திலேயே, சுமார் 5 இலட்சம் வெள்ளி மதிப்பில், இரட்டை மாடி வீடுகள் கட்டித்தருவதற்கு மேம்பாட்டு நிறுவனத்தை ஒப்புதல் தர செய்தவர் பேராசிரியர் இராமசாமிதான்; சாமிவேலுவோ, இந்த மோகனோ அல்ல. கிராமத்தை விட்டு வெளியேறும் அம்மக்களுக்கு, 8 ஆயிரம் ரிங்கிட் செலவுத்தொகையாக மேம்பாட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நிர்பந்தித்து, வாங்கி தந்தவரும் பேராசிரியர்தான்; இப்பொழுதும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அந்த 12 குடும்பங்களுக்கு மாத வாடகை பெற்று தருவதற்கு தொடர் முயற்சிகள் எடுத்து வருவதும் பேராசிரியர் அவர்கள்தான். கம்போங் புவா பாலா விவகாரத்தில் அனைத்தும் தெரிந்தவர் போல் முக்கை நுழைத்து குழப்பம் ஏற்படுத்தியதுதான் மோகனின் சாதனை; அந்த குழப்பத்தின் வழி, மலிவான விளம்பரம் தேடுவதுதான் மோகன் போன்றவர்களின் வாடிக்கை என்று அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தால் புரிகிறது.
நேற்று கம்போங் புவா பாலா கிராமத்தில் வீடுகள் உடைபடும்போது பேராசிரியர் இராமசாமி அங்கு வரவில்லை; அவர் கைப்பேசியை அடைத்து விட்டார் என்றெல்லாம் பிதற்றியிருக்கிறார் மோகன். நேற்று உடைக்கப்பட்டது மேம்பாட்டு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டவர்களின் வீடுகள். அவர்கள், தாங்கள் வீட்டை காலி செய்கிறோம் என்று தாமாகவே மேம்பாட்டு நிறுவனத்தினரிடம் சாவியை, ஒப்புதலை வழங்கி விட்டனர். அந்த குடியிருப்பாளர்களின் வீட்டை உடைக்க மேம்பாட்டாளர் உள்ளே சென்றார்; அப்பொழுது கிராமவாசிகளே அந்த மேம்பாட்டு நிறுவனத்தினரை உள்ளே அனுமதித்து விட்டபிறகும், தேவையில்லாமல் அங்கே கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது மோகனின் கூட்ட்டத்தினர்தான் என்பதை நேரில் கண்டவர்களே சொல்கிறார்கள். மேலும் மோகன், நேற்று காலை பேராசிரியர் தனது கைப்பேசியை அடைத்து விட்டார் என்று மோகன் கூறியிருப்பது பச்சை பொய், இந்த ஒரு பொய்யே மோகனின் கற்பனை வளத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் பேராசிரியர் அவர்களின் கைப்பேசி இயக்க நிலையிலேயே இருக்கும். தான் மலிவு விளம்பரம் தேட வேண்டும் என்பதற்கு, மற்றவர்கள் பற்றி பொய்களை கூறுவதை மோகன் நிறுத்திக் கொள்வது நல்லது.

நேற்று கம்போங் புவா பாலாவில் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் நிகழ்ந்திருக்காது, தேவையில்லாமல் அங்கே குழப்ப நிலையை ஏற்படுத்தி ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியது மோகனின் படையினர்தான் என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது. அங்கே வந்திருந்த பத்திரிகை நிருபர்களையும் உள்ளே விடாமால் தடுத்து, போலீசாரோடு மோதியது எல்லாமே யார் என்பது எங்களுக்கும் தெரியும். சாலையில் படுத்துக்கொண்டு எங்கள் வீடுகளை உடைக்காதே என்று கேலிக்கூத்து நடத்தியது ஒன்றும் கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்கள் அல்ல; அவர்கள் யார் என்பதை நான் சொல்லித்தான் மோகனுக்கு தெரிய வேண்டுமா? வேண்டுமென்றால் அங்கு குழுமியிருந்த பத்திரிகை நண்பர்களை கேட்டு பார்க்கலாம்.
பிள்ளையும் கிள்ளி விட்டு, தொட்டிலும் ஆட்டுவது என்பதை நிருபிக்கும் வண்ணமாக உள்ளது மோகன் தலைமையிலான மஇகா இளையோரின் நடவடிக்கை. கம்போங் புவா பாலா நிலத்தை விற்று அந்த மக்களை நட்டாற்றில் விட்டது மஇகா பங்கு வகித்த முன்னாள் தேசிய முன்னணி அரசுதான். அப்பொழுது ஆட்சிக்குழுவில் அமர்த்திருந்த டத்தோ சுப்பையாவை முதலில் கேள்வி கேளுங்கள்; இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த நில விற்பனையை தடுக்க முயற்சிக்கவில்லை? அப்பொழுதெல்லாம் சும்மா இருந்து விட்டு, இப்பொழுது திடீரென்று பாசமழை பொழிவதால், மக்கள் உங்கள் மலிவு விளம்பர நாடகத்தை நம்ப மாட்டார்கள். நேற்று முன்தினம் கம்போங் புவா பாலாவில், மக்களுக்கு ஆதரவாக 200 பேரை அழைத்து வந்ததாக கூறியுள்ளார். அவர் அழைத்து வந்தவர்கள், ஆதரவளிப்பதர்க்கா? அல்லது எதற்கு என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.
மக்கள் கூட்டணி தலைவர்களை பற்றி ஏதேதோ வாய்க்கு வந்ததையெல்லாம் கூறியிருக்கும் மோகன் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதை மக்கள் அறிவார்கள். பதில் கூற வேண்டிய கேள்விகள் எத்தனையோ உள்ளன, முதலில் அதற்கு பதில் கூறுங்கள், பிறகு எங்கள் மக்கள் கூட்டணி தலைவர்களைப் பற்றி பேசலாம். எங்கள் மக்கள் கூட்டணி பிரதிநிதிகளின் அரசியல், கொள்கையை அடிப்படையாக கொண்டது; கொள்ளையையும், பணத்தையும் அடிப்படையாக கொண்ட அரசியல் யார் அரசியல் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஏழை சமுதாயத்தின் வியர்வை, இரத்தம் சிந்தி உழைத்த பணத்திற்கு முதலில் பதில் கூறுங்கள் பிறகு கேள்விகள் கேட்கலாம். புலியை பற்றி பேச பெருச்சாளிகளுக்கு தகுதியில்லை.

No comments: