Wednesday, April 1, 2009

வாய்சவடால் வீரன் சாமிவேலு

பேராசிரியர் இராமசாமி ஆசிரியர் வேலை செய்யும் போது நல்லதை பேசியதே கிடையாது என்று சாமிவேலு கூறியிருப்பதற்கு எம்முடைய பதில் :-

ஆசிரியர் வேலை செய்யும் போது மட்டுமல்ல, எப்பொழுதுமே நான் நல்லதையே நினைப்பேன், நல்லதையே சொல்வேன், நல்லதையே செய்வேன். கடந்த 30 வருடமாக சாமிவேலுவின் தலைமைத்துவத்தின் கீழ் மஇகா என்ன நல்ல காரியத்தை செய்துவிட்டது, மஇகாவைப் பற்றி நல்லதாய் சொல்ல?? இந்நாட்டு இந்திய சமுகத்திற்கு சிறந்த சேவையாற்றும் தனி நபர்களுக்கும், பொது இயக்கங்களுக்கும் பாராட்டு தெரிவிக்க நான் ஒருபோதும் தயங்குவது இல்லை. அதே வேளை, இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு துரோகத்தை மட்டுமே செய்துள்ள இயக்கங்களுக்கு சமாதி கட்டுவதில் இருந்தும் நான் பின்வாங்கப்போவதில்லை. இந்த சமுதாயத்தின் துரோகிகளுக்கு சமாதி கட்ட நான்தான் பொருத்தமானவர் என்று சாமிவேலுவே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், 30 வருடங்களாக மலேசிய இந்திய சமுதாயத்தின் இன்னல்களுக்கு பல விதங்களில் காரணமாய் உள்ள மஇகாவிற்கு நான் சமாதி கட்ட தேவையில்லை, எதிர்வரும் புக்கிட் செலாம்பாவ் இடைத்தேர்தலில் புக்கிட் செலாம்பாவ் மக்களே சமாதி கட்டுவார்கள்.

சாமிவேலுவின் தனிப்பட்ட கருத்தை அவர் கூறியிருக்கலாம், ஆனால் நான் கூறியது இந்நாட்டு இந்திய சமுதாயத்தின் கருத்து. உண்மை பல நேரங்களில் கசக்கும் என்று கூறுவார்கள், சாமிவேலுவின் விசயத்தில் அக்கூற்று எவ்வளவு உண்மை என்று இப்போது தெரிகிறது. 52 ஆண்டுகளில் மலேசிய இந்திய சமுதாயம் அடைந்ததை விட இழந்ததுதான் அதிகம். அதுவும் சாமிவேலுவின் தலைமையின் கீழான கடந்த 28 வருடங்கள் மலேசிய இந்தியர்களின் வாழ்வின் இருண்ட பாகம் என்று கூறலாம். கடந்த 28 வருடங்களில் இந்நாட்டில் மஇகா என்னவெல்லாம் சாதித்தது? எத்தனை இந்திய மாணவர்களுக்கு அரசாங்கத்தின் பொதுசேவைத் துறையின் உபகாரச்சம்பளம் தரப்பட்டது?? எத்தனை தகுதியுள்ள இந்தியர்களுக்கு பொதுசேவைத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது?? பொதுசேவையில் உள்ள எத்தனை இந்தியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது?? அங்கொன்றும், இங்கொன்றும் என்று இந்தியர்கள் கிள்ளுக்கீரைப் போல் நடத்துப்பட்டது சாமிவேலுவின் காலத்தில்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. சாமிவேலுவின் காலத்தில்தான் இந்நாட்டு இந்தியர்கள் அதிகம் ஏமாற்றப்பட்டனர், நிறைய உரிமைகளை இழந்தனர்.

சாமிவேலு, தனது தலைமை காலத்தில் செய்த சாதனையெல்லாம் இந்நாட்டு இந்தியர்களை ஏமாற்றியது மட்டுமே. சாமிவேலு பெரும் ஆரவாரத்தோடு அறிவித்த திட்டங்களெல்லாம் இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு பெரும் ஏமாற்றங்களாகவே மிஞ்சியுள்ளன என்பது நாடறிந்த உண்மை. இந்நாட்டு இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை உயர்த்தப்போகிறேன், கிழிக்கப்போகிறேன் என்று அறிவித்து ஆரம்பிக்கப்பட்ட மைக்கா ஹோல்டிங்ஸ் இன்றைய நிலை என்னவென்று ஊருக்கே தெரியும். மைக்கா ஹோல்டிங்சோடு சாமிவேலுவின் சாதனை நின்று விட்டதா என்றால் இல்லை; இந்நாட்டு ஏழை இந்தியர்கள் இனிமேல் இந்நாட்டிலேயெ குறைந்த விலையில் மருத்துவம் படிக்கலாம், வெளிநாட்டில் சென்றுதான் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்ட ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகத்தில் எத்தனை ஏழை இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்?? யூக்ரேன், ரஷ்யாவில் ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகத்தைவிட குறைந்த விலையில் பல இந்திய மாணவர்கள் மருத்துவம் பயில்கிறார்கள் என்பதுதான் நடப்பு உண்மை. இதுதான் சாமிவேலு கூறிய ஏழை இந்திய சமுதாயத்தின் பல்கலைக்கழகமா??

சாமிவேலுவின் சாதனை பட்டியல் அதோடு நின்றுவிடவில்லை, டாக்சி உரிமம் ஒதுக்கீட்டில் முறைகேடு, கேபிஜே கூட்டுறவு விவகாரம், எம்ஐஇடி நிதி முறைகேடு என்று நீண்டுகொண்டே போகிறது. மலேசிய தமிழர்கள்தான் ஏமாற்றப்பட்டார்கள் என்றால், இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கென்று சேகரிக்கப்பட்ட நிதியும் அவர்களிடத்தில் போய் சேரவில்லையாம். வாழ்வா, சாவா என்று போரோடு போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் வயிற்றிலும் அடிக்கலாமா?? இது நியாயமா?? இதையெல்லாம் கேட்டால் என் மீது பாய்கிறார் சாமிவேலு. மஇகா அதை செய்தது, இதை செய்தது என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்.

மஇகாவின் தலைமையில் இந்நாட்டில் நடந்துள்ள, நடந்துக்கொண்டிருக்கின்ற ஊழல்களுக்கு சாமிவேலு பதில் கூறியே ஆக வேண்டும். நான் கேட்பதற்கெல்லாம் பதில் கூறாமல், சாமிவேலு என்னைப் பற்றி வீண் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பினாங்கு மாநிலத்தில் அடியோடு சாய்க்கப்பட்டது மஇகா; பினாங்கில் உங்கள் கட்சி எதையுமே சாதிக்காததால்தான் இந்த நிலை. உங்களின் வெற்று வாக்குறுதிகளை நம்பி விரக்தியின் உச்சிக்கு சென்றதால்தான், கடந்த பொதுத்தேர்தலில் உங்கள் கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். பினாங்கு மாநிலத்தில் உங்கள் கட்சிக்கு ஒரு பிரதிநிதி கூட இல்லாத நிலையில் என்னைப் பற்றி கேள்வியெழுப்ப நீங்கள் யார்??

மீண்டும் அழைக்கிறேன்; பகிரங்கமாக!! உங்கள் பக்கம் உண்மையிருந்தால், பொதுமேடைக்கு தைரியமாக வரலாம். இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு யார் காரணம் என்று பொது மேடையில் நேருக்கு நேர் நின்று விவாதிப்போம். அதற்கு நீர் தயாரென்றால், சொல்லுங்கள்; எங்கே??என்று??எப்போது?? அதை விடுத்து இராமசாமி அப்படி, இராமசாமி இப்படி என்றெல்லாம் வீண் பேச்சும், வெட்டி அறிக்கைகளும் வேண்டாம். தேர்தலில் வென்றால் அதை செய்வேன், இதை செய்வேன் என்ற உங்களின் வெற்று வாக்குறுதியை நம்பி புக்கிட் செலாம்பாவ் வாக்காளர்கள் ஏமாந்து போவார்கள் என்று பகல்கனவு காண வேண்டாம். உங்களையும், மஇகாவையும் நம்பி இந்த சமுதாயம் நிறைய ஏமாந்துவிட்டது, இனியும் ஏமாறுவார்கள் என்று எண்ண வேண்டாம். நீங்கள் வாய்சொல்லில்தான் வீரன் என்பதை இந்நாட்டின் இந்திய சமுதாயம் உணர்ந்து வெகு நாளாகின்றது.

இதனை சவாலாக எடுத்துக்கொண்டாலும் சரி, எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டாலும் சரி, மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன், உண்மை உமது பக்கம் இருந்தால் பொது மேடையில் சந்திக்க வாருங்கள், அதை விடுத்து புக்கிட் செலாம்பாவை சுற்றியுள்ள அடர்ந்த காடுகளுக்குள் ஒளிந்துக்கொண்டு அறிக்கை விட வேண்டாம்.

பினாங்கு மாநில துணை முதல்வர்,
பேராசிரியர் இராமசாமி.