Monday, August 10, 2009

வேதமூர்த்தி அவர்களே, எதுவாக இருந்தாலும் மலேசியாவிற்கு வந்து பேசுங்கள்.

அண்மைய காலமாக தனது அறிக்கைகளின் வழி, தொடர்ந்து மக்கள் கூட்டணியை வசைப்பாடி வரும் வேதமூர்த்தி, அவரது கருத்துகளை இந்த நாட்டிற்கு திரும்பிவிட்டு பேசலாம். அந்நிய நாட்டில் உட்கார்ந்துக்கொண்டு தலையும் தெரியாமல், வாழும் தெரியாமல் அறிக்கைகள் விடுவதை அவர் நிறுத்திக் கொள்வது நல்லது.

கடந்த சில மாதங்களாகவே தனது அறிக்கைகளில் மக்கள் கூட்டணியின் மீது சேற்றை வாரி வீசும் வண்ணம் அறிக்கைகளை வேதமூர்த்தி வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக கம்போங் புவா பாலா விவகாரத்தில் தனது அறிக்கை விடும் திறனை சற்று அதிகமாகவே உபயோகிக்கின்றார் வேதமூர்த்தி.

தனது
வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் சட்ட நுணுக்கங்கள் எல்லாம் பேசுகிறார். சட்ட நுணுக்கங்கள் பேசும் வேதமூர்த்தி அவர்களுக்கு, கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பை மீறும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் இல்லை என்பது தெரியாதோ? இந்த நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்ற முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தைப் பற்றி தாங்கள் ஒரு வார்த்தையும் கூறாததன் மர்மம் என்ன? நில கையாக்க சட்டத்தை பயன்படுத்தி கம்போங் புவா பாலா நிலத்தை கையகப்படுத்துங்கள் என்று கூறும், தங்களுக்கு அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏறக்குறைய 10லிருந்து 15 கோடி வெள்ளி வரை செல்லும் என்பது தெரியுமா? கடந்த வருடத்தில் பினாங்கு மாநிலத்தின் மொத்த வரவே ஏறக்குறைய 30 கோடி ரிங்கிட் என்பதாவது வேதமூர்த்திக்கு தெரியுமா? மொத்த வரவில் ஏறக்குறைய பெரும்பகுதியை ஒரு பகுதி நிலத்தை கையகப்படுத்த உபயோகித்து விட்டால், பினாங்கு மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும், அமல்படுத்தப்படப்போகும் திட்டங்கள் பலவற்றை மாநில அரசு கைவிட வேண்டிய நிலை வரும். ஆண்டு தோறும் மாநிலத்தில் உள்ள 28 தமிழ்பள்ளிகளுக்கு வழங்கப்படும் 1.5 மில்லியன் ரிங்கிட் மான்யம், ஆலயங்களுக்கும் பொது இயக்கங்களுக்கும் வழங்கப்படும் மான்யம், 60 வயதைக்கடந்த முதியோர்களுக்கு வழங்கப்படப்போகும் சிறப்பு நிதி, கடுமையான ஏழ்மையை ஒழிக்க ஒதுக்கப்படும் மாநில அரசின் சிறப்பு நிதி என்று பல்வேறு மக்கள்நல திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகவேதான், கம்போங் புவா பாலா நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்று தவறு புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைவரான நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக்கிடம் இந்த நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசின் சார்பாக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அதனை தேசிய முன்னணி தலைவர் நிராகரித்தபொழுது, இந்த வேதமூர்த்தி ஏதும் பேசாமல் மௌனமாக இருந்ததின் அர்த்தம் என்ன? கம்போங் புவா பாலா நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றது தேசிய முன்னணிதான் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று, இருந்த பொழுதிலும் தேசிய முன்னணியை இந்த விவகாரத்தில் பொறுப்பேற்குமாறு யாருமே கூறவில்லை; குறிப்பாக வேதமூர்த்தி கூறவில்லை. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த பரவசி மாநாட்டில் கூட தேசிய முன்னணி மலேசிய இந்தியர்களை புறக்கணிக்கிறது என்று துண்டு அறிக்கைகள் எல்லாம் கொடுத்த வேதமூர்த்தி, இப்பொழுது வெட்ட வெளிச்சமாக தேசிய முன்னணி அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் கூட்டணி அரசாங்கத்தை பலிகடா ஆக்கும் விதமாக அறிக்கை விடுவதின் மர்மம்தான் என்ன?

தனது அறிக்கைகளில் மாநில முதல்வரை இனவாதி என்றும், துணைமுதல்வரை மண்டோர் என்றும் கூறியிருக்கும் வேதமூர்த்தி யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறார் என்று தெரிந்துக் கொள்ளலாமா? கடந்த சில வருடங்களாக இலண்டனில் வசித்து வரும் வேதமூர்த்தி, மலேசியாவிற்குள் திரும்பி வருவதற்கு ஏதுவாகத்தான் மக்கள் கூட்டணியை தாக்கும் படலம் தொடங்கியுள்ளதா என்பது அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வியாகும்.

கம்போங் புவா பாலா விவகாரத்தில், வேதமூர்த்தி ஏதேதோ பேசி, அறிக்கைகள் விடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. களத்தில் இறங்கி நிலைமைகளை கண்டறிந்தவர்களுக்கே கம்போங் புவா பாலா பிரச்சனையின் உண்மை நிலவரம் புரியும். எதோ ஒரு அந்நிய தேசத்தில் ஒளிந்துக்கொண்டு அறிக்கை விடுவதால் எல்லாம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விட முடியாது. புவா பாலா பிரச்சனையில் அந்த மக்களுக்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்தித்தர மாநில முதல்வரும், துணை முதல்வரும் எடுக்கும் முயற்சிகளைப் பற்றி, எதோ ஒரு மூலையில் அமர்ந்துக்கொண்டு சவடால் பேசும் வேதமூர்த்திக்கு தெரியாமலிருப்பது அதிசயமல்ல. தலையும் புரியாமல், வாளும் புரியாமல் உங்களைப்போன்ற சிலர், கம்போங் புவா பாலா பிரச்சனையில் மூக்கை நுழைத்து, அங்குள்ள மக்களை குழப்பிக் கொண்டிருப்பதால்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வை எட்டுவதில் குழப்பம் நீடிக்கிறது. இப்பொழுது இறுதி தீர்வாக, கம்போங் புவா பாலா மக்கள் அவர்கள் வாழ்ந்த அந்த நிலத்திலேயே 5 இலட்சம் வெள்ளி பெறுமானமுள்ள இரட்டை மாடி வீடுகளை பெறும் ஒரு அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இறுதி தீர்வுத்திட்டத்தையும் சீர்குலைத்து பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க ஒரு தரப்பு வேலைகளை செய்து வருகின்றது. வேதமூர்த்தியின் அறிக்கைகளும் அந்த தரப்போடு ஒத்துப் போவதைப்போல அமைந்துள்ளதுதான் வியப்பாக உள்ளது.

இறுதியாக வேதமூர்த்தி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தாங்கள் எந்த விவகாரத்திலும், எந்தவொரு கருத்தை சொல்ல விரும்பினாலும் மலேசியாவிற்கு வந்து கூறினால் சிறப்பாக இருக்கும். எது எப்படி இருப்பினும், நாம் பிறந்த மண் இதுதான், எதுவாக இருந்தாலும் இங்கிருந்து பேசுவதும், போராடுவதும்தான் ஒரு உண்மையான தமிழ் மகனுக்கு சிறப்பு. சுயமரியாதையோடு வாழும் ஒவ்வொரு தமிழனும் அதையே விரும்புவான். பிரபாகரன் என்ற மாவிரன் பிறந்த இனம் நம் தமிழினம்!! வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் தாய் மண்ணை விட்டு போக மாட்டேன் என்ற உறுதியோடு போராடிய அந்த மறத்தமிழனின் வழி வந்த தமிழ்ர்கள் நாங்கள். எங்கள் போராட்டம் எல்லாம் இந்த மண்ணில் தொடங்கி, இந்த மண்ணிலேயே முடியும். யாருக்கும் பயந்தோ, எதற்கும் அடிபணிந்தோ கோழைகளைப் போல் ஓடி ஒளியாமல் இங்கிருந்தே போராடுவோம். இதையெல்லாம் மறந்து விட்டு அந்நிய தேசத்தில் மறைந்துக்கொண்டு அறிக்கைவிடும் தங்களுக்கு பினாங்கு மாநில அரசைப் பற்றியோ, துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியைப் பற்றியோ பேசுவதற்கு அருகதைக் கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இனியும் நீங்கள் தொடர்ந்து பேராசிரியர் அவர்களைப் பற்றியோ, பினாங்கு மாநில அரசைப் பற்றியோ சிறுமைப்படுத்தி அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை. மைக்கா ஹோல்டிங்க்ஸ் குளறுபடிகளுக்கு பிறகு பொருளாதார ரீதியாக மலேசிய தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டதை வெட்ட வெளிச்சமாக்க வேண்டி வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இலண்டனில் பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போகிறோம், இந்த நாட்டு இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் போகிறோம் என்ற முழக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இஅய்க்கத்தின் முன்னோடிகள் ஐவர் கைது செய்யப்பட்டப் பிறகு, அந்த வழக்கை முன்னெடுப்பதாகக் கூறித்தானே மலேசிய தமிழர்கள் வாரிக்கொடுத்த இலட்சக்கணக்கான பணத்தோடு இலண்டன் சென்றீர்கள். அந்த வழக்கு என்ன ஆனது? இசா சட்டத்தின் கீழ் கைதாவதற்கு முன் அந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து முன்னேற்பாடுகளையும் முன் செய்த அந்த தலைவரிடமே கேட்போமா?

நீங்கள் மலேசியாவிற்குள் திரும்பகையில் கைதாகமால் இருக்க வேண்டும் என்று நினைத்தால், நேரடியாக அரசாங்கத்திடமோ, காவல்துறையுடனோ பேசுங்கள், அதை விடுத்து தேசிய முன்னணியை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் மக்கள் கூட்டணி மீது அவதூறுகளை கூறாதிர்கள். மக்களை குழப்பும் வண்ணம் இனியும் நீங்கள் அவதூறு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தால் இப்பொழுது நான் வெளிக்கொனர்ந்திருப்பது வெறும் ஆரம்பம் மட்டும்தான், இதற்கு மேல் வெளிவரும் உண்மைகள்அதிரடியாக இருக்கும் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

இங்கனம்,

சத்திஸ் முனியாண்டி,
பினாங்கு மாநில துணை முதல்வர்
பேராசிரியர் இராமசாமி அவர்களின்
அரசியல் துறை அதிகாரி &
பினாங்கு மாநில ஜசெக சோசலிஸ்ட் இளைஞர் பகுதி
செயற்குழு உறுப்பினர்.

No comments: