Saturday, May 30, 2009

ஐந்தாம் கட்ட ஈழப்போரை பிரபாகரன் முன்னெடுப்பார், உலகத்தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும்!!! - பேராசிரியர் இராமசாமி


ஐந்தாம் கட்ட ஈழப்போரை பிரபாகரன் முன்னெடுப்பார், உலகத்தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும்!!! - பேராசிரியர் இராமசாமி

பிரபாகரன் வீரச்சாவடைந்தாரா, உயிரோடு உள்ளாரா?? என்பதுதான் இன்றைய நிலையில் உலகத்தமிழர்களால் உற்று நோக்கப்படும் விடயமாக உள்ளது. புலிகளை வென்று விட்டதாக கூறி வெறறு மாயையை நம்பி கும்மாளமடிக்கும் சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ள "பிரபாகரனின் உடல்" படங்கள் முற்றிலும் கேலிக்குரியது, கோமாளித்தனமானது. கடந்த மே 18-ஆம் தேதி இலங்கை இராணுவம் பிரபாகரனையும் மற்றும் பல முக்கிய தளபதிகளையும் வெற்றிகரமாக கொன்று விட்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு கொண்டாடியது. அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பின், புலிகளின் அனைத்துலக செய்தித்தொடர்பாளர் க.பத்மநாபன், புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 17-ஆம் தேதி நடந்த சமரில் வீரமரணம் அடைந்ததாக ஓர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த செய்திகளில் தெரியும் முரண்பாடுகளை காணும்போது இந்த செய்திகளெல்லாம் வெறும் வதந்திகளாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுவதன் மூலம் புலிகளின் இயக்கத்தை உடைக்க இலங்கை இராணுவம் செய்யும் சதி வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. புலிப்போராளிகளை உளவியல் மூலமாக பலவீனப்படுத்தும் அதே வேளை, அனைத்துலக நாடுகளிடம் இருந்து தமிழர் பகுதிகளில் மீழ்கட்டமைப்பு என்ற சாக்கில் பொருளுதவிகளை பெறுவதற்காகவும், இலங்கை இனவெறி அரசு இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுகிறது என்பது மட்டும் திண்ணம். அதே வேளையில், தலைவர் பிரபாகரன் உடல் என்று கூறி சிங்கள இராணுவம் காட்டும் உடல் பிரபாகரனுடையுதுதானா என்ற சந்தேகமும் உலகத்தமிழர்கள் மத்தியில் எழும்பியுள்ளது. கண்டிப்பாக அது பிராபகரனுடைய உடலாக இருக்காது என்பதுதான் அனைவரது நம்பிக்கையும் கூட.


புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் க.பத்மநாபனின் அறிக்கையும், உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள இராணுவம் பிரபாகரன் மரணம் என்று அறிவித்து ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பிறகு பத்மநாபனின் அறிக்கை வெளிவந்துள்ளது மிகப்பெரும் முரண்பாடாக உள்ளது. கடந்த காலங்களில் புலிகள் எப்பொழுதுமே தங்களது போராளிகளின் வீரமரணத்தை பற்றிய அறிவிப்புகளை உடனுக்குடன் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இம்முறை ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பின்புதான் க.பத்மநாபன் அறிவிக்கிறார், புலிகளின் தலைவரும், தளபதிகளும் வீரமரணம் அடைந்து விட்டார்கள் என்று. இந்த ஒரு முரண்பாடே, உலக தமிழர்கள் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தி விட்டது. அப்படி, தலைவரும் அவர்தம் குடும்பத்தினரும், மூத்த தளபதிகளும் உண்மையிலேயே வீரமரணம் அடைந்திருப்பார்கள் என்றால், அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? அவர்களின் உடல்கள் எங்கே?

பெரும்பாலானோர் நம்புவதைப் போல் புலிகளின் தலைவர் பிரபாகரன், சுமார் 300 போரளிகளோடு, இறுதிக்கட்ட தாக்குதலுக்கு மூன்று வாரங்கள் இருக்கும் போதே போர் சூன்ய பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறான செய்திகளில் களத்திலிருக்கும் போரளிகளிடமிருந்து வருவதால், இந்த செய்திகள் உண்மையாகவே இருக்கக்கூடும். தமிழகத்தலைவர்கள் வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோரும் இதையே கூறுகின்றனர். தலைவர் பிரபாகரன் வெகு விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்றும் அவர்கள் மிக அழுத்தமாக கூறுகின்றனர். அதுதான் உண்மை என்று நாமும் நம்புவோம். தலைவர் பிரபாகரன் அவர்கள், 5-ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை, உலகத்தமிழர்களின் மத்தியில் மிக ஆழமாக வேருன்றியுள்ளது. 5-ஆம் கட்ட ஈழப்போருக்கான ஏற்பாடுகளை தலைவர் முன்னெடுத்து, தானே இம்முறையும் போரை முன்னின்று நடத்துவார் என்றே தெரிகிறது.

இதற்கிடையில், பிரபாகரனைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பை பற்றிய கேள்விகளும் எழவே செய்கிறது. பிரபாகரனைப் பற்றிய கே.பத்மநாபனின் அறிவிப்பிற்கும் இந்தியாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று உலகத்தமிழர்கள் மத்தியில் பலமான சந்தேகம் இருக்கவே செய்கிறது. இலங்கை இனவெறி அரசு, ஈழத்தமிழர்களின் மேல் தொடுத்த மிகக்கொடுரமான இன அழிப்புப்போரை இந்தியாதான் முழுமூச்சாக ஆதரித்தது என்பதை உலக்த்தமிழர்கள் அறிவார்கள். ஈழப்போரை, வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் களமாக இந்தியா ஆக்கிவிட்டிருந்தது என்பது தெள்ளத்தெளிவான விடயம். புலிகள் 5-ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுத்து ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவார்கள் என்பதும் இந்தியாவிற்கும் தெரியும், ஆகவே புலிகள் வைத்துக்கொண்டு சிங்களவர்க்கும் தமிழர்களுக்கும் ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படுத்துவதை இந்தியா விருமபவில்லை. ஆகவே, அவசர,அவசரமாக புலிகள் தலைமை அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் அல்லாத தமிழர்களான டக்ளஸ் தேவனந்தா, ஆனந்த சிவசங்கரி ஆகியோரை முன்னிறுத்தி ஓர் சமரச உடன்படிக்கை அல்லது அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த விரும்பியிருக்கக்கூடும். இந்தியாவின் இந்த இராசத்தந்திர சதியில் க.பத்மநாபனும் விழுந்து விட்டாரா என்ற கேள்வி பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களிடம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் பற்றி பேசுவதற்கு, அவர்களின் பிரதிநிதிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. புலிகளை தமிழர்களின் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்ளாத இந்தியா, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழமக்களின் பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் பேசுவதற்கு மறுப்பது ஏன் என்ற வினா உலகத்தமிழர்களின் ஒட்டு மொத்த கேள்வியாகும். ஈழத்தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாகத்தான் எந்தவொரு அதிகாரப்பகிர்வு யோசனையும் முன்னெடுக்கப்பட வேண்டும். எப்பொழுதுமே ஈழத்தமிழர்களுக்கு உடன்பாடில்லாத டக்ளஸ் தேவனந்தாவுடனோ, ஆனந்த சிவசங்கரியுடனோ, அல்லது துரோகி கருணாவோடோ எந்தவொரு பேச்சுகளும் நடைப்பெறக்கூடாது என்பதுதான் புலம்பெயந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் கருத்தும் கூட.


இறுதியாக, பிரபாகரன் என்ற மாவீரன் பற்றி வரும் செய்திகளில், பல செய்திகள் வெறும் வதந்திகள் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். இப்பொழுது இருப்பதை விட பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்தது தமிழீழப் போராட்டம். அவ்வாறான பல்வேறான இக்கட்டான சூழ்நிலைகளையெல்லாம் கடந்து தமிழீழ போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன். ஆகவே, இப்பொழுது நிகழும் இந்த குழப்பமிகுந்த சூழ்நிலையையும் கடந்து, ஐந்தாம் கட்ட ஈழப்போரை தலைவர் பிரபாகரன் முன்னெடுப்பார் என்று தாராளமாக உலக்த்தமிழர்கள் ந்ம்பலாம். மரணத்தை வென்ற மாவீரன் பிரபாகரன். பிரபாகரனுக்கு மரணமே கிடையாது; என்றென்றும் தமிழர்களின் மனதிலெல்லாம் அவர் வாழ்ந்துக்கொண்டுதானிருப்பார். பூமிப்பந்தில் தமிழர் என்ற இனம் உள்ளவரை பிரபாகரனின் புகழை சரித்திரங்கள் பாடும். ஆகவே, உலகத்தமிழர்கள் அனைவரும், குறிப்பாக மலேசியத்தமிழர்களான நாம், ஈழத்தமிழர்களுக்கு நம்மால் ஆன உதவிகளயெல்லாம் செய்து, அவர்களின் வாழ்வுரிமை போராட்டம் வெற்றிப்பெற உறுதுணையாக இருப்போமாக.


பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர்,
மலேசியா

No comments: