Tuesday, June 9, 2009

தமிழினத்திற்கு எவ்வகையிலும் உதவாதோரெல்லாம், தமிழ் பத்திரிகைகளின் மீது சேற்றை வாரி வீசுவதா??


வெளியுறவுத்துறை துணையமைச்சராக இருக்கும் கெராக்கானின் கோகிலன், தமிழ் பத்திரிகைகளால் இந்திய சமுதாயத்திற்கு பயன் இல்லை என்று கூறியதாக வந்திருக்கும் பத்திரிக்கை செய்தியைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். இந்நாட்டு தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய அங்கமாக விளங்கும் தமிழ் பத்திரிக்கைகளின் மீது சேற்றை வாரி வீசும் துணையமைச்சர் கோகிலனுக்கு கடுமையான கண்டனத்தை இவ்வறிக்கையின் வழி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் பத்திரிக்கைகள் என்றால் எவ்வலவு வேண்டுமானாலும் எகத்தாளம் பேசலாம் என்ற நினைப்பில் கோகிலன் மிதக்கிறார் போலும். இதே போன்ற அவதூறான கூற்றுகளை சீன பத்திரிக்கைகளின் மீதோ, மலாய் பத்திரிக்கைகளின் மீதோ கூறுவதற்கு கோகிலனுக்கு தைரியம் இருக்கிறதா? சீன பத்திரிக்கைகளை பற்றி இவ்வாறு கோகிலன் கூறியிருந்தால், அவரின் சொந்த கட்சியிலேயே விரட்டியடித்து விட்டிருப்பார்கள். தமிழர்களும், தமிழ் பத்திரிக்கைகளும் இந்த கோகிலன் போன்றோருக்கு கிள்ளுக்கீரை என்ற நினைப்புப்போலும்.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழ் பள்ளிகளையெல்லாம் மூடி விட வேண்டும் என்று கூறிய ஓர் அரசியல்வாதிக்கும், இந்த கோகிலனுக்கும் எந்தவொரு வேற்றுமையும் கிடையாது. தமிழை வாழவைக்கும் தமிழ்பள்ளிகளின் மீதும், தமிழ்பத்திரிக்கைகளின் மீதும் சில கருங்காலிகள் குறியாக இருப்பது ஏனென்றுதான் நமக்கு புரியவில்லை.

இந்த நாட்டு தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் தமிழ் பத்திரிக்கைகளின் பங்கு என்ன என்பதை யாவரும் அறிவர். நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ் பத்திரிக்கைகள் எதற்கும் உதவாதவை என்பதைப் போன்ற அறிக்கை வெளியிட்டுள்ள கோகிலன் ஒரு விவரமாறியாத அரசியல்வாதி என்றுதான் கூற முடியும். இந்த கோகிலன் உள்ள இடம் அப்படி; மரத்துக்கு பின்னால் இந்தியர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்றும் “புகழ்ந்த” தலைவர்கள் வந்த கட்சியில் அல்லவா உறுப்பினராக உள்ளார்; இவர் தமிழ் பற்றாளராகவும், உண்மை தமிழராகவும் இருப்பார் என்று எதிர்பார்த்தால் அது அறியாமையை குறிப்பதாகவே இருக்கும்.

மருந்துக்கும் தமிழர்களின் நலன்களைப் பற்றி பேசியில்லாத கோகிலன் போன்றோரெல்லாம் தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஈழத்தில் எமது சகோதரர்கள் படும் துன்பங்களை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருப்பதே தமிழ் பத்திரிக்கைகள்தான். வெளியுறவுத்துறையில் அமர்ந்துக்கொண்டிருக்கும் கோகிலன், ஈழத்தமிழர்களின் இன்னல்களைப் பற்றி அவரின் அமைச்சரிடம் எப்பொழுதாவது வாய்த்திறந்திருப்பாரா? அவ்வாறு வாய்த்திறந்திருந்தால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக மலேசியா நடந்துக் கொண்டிருக்குமா?உலகத்தமிழர்களையெல்லாம் கவலைக்குள்ளாக்கியிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சனையைப் பற்றி மறந்தும் பேசியில்லாத இந்த கோகிலன் உண்மையில் தமிழன்தானா என்ற சந்தேகமும் வருகின்றது.

தமிழ் பத்திரிக்கைகளை பழிப்பது தமிழை பழிப்பதற்கு சமம்; தமிழை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம் என்பதை கோகிலன் உணர வேண்டும். இந்தியர் என்ற அடைமொழியை சுமந்துக்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த கோகிலனால், மலேசியத் தமிழர்களின் மன ஓட்டத்தை புரிந்துக்கொள்ள முடியாததால் உடனடியாக பதவி விலக வேண்டும். அதேவேளையில் கோகிலன் தனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும். கோகிலன் தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி வெளியிட்டுள்ள கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை எழுப்பி அவரை மன்னிப்புக்கேட்குமாறு வலியுறுத்துவேன்.

பேராசிரியர் இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர்

No comments: